Friday, March 23, 2018


கிராமப்புற பெண்களுக்கு இன்டர்நெட் கற்றுத்தரும் இன்டர்நெட் நண்பர்கள் திட்ட துவக்க விழா

நாமக்கல் மாவட்டத்தில் கூகிள் இந்தியா, டாடா டிரஸ்ட் மற்றும் வாய்ஸ் பவுண்டேஷன் உதவியுடன் கிராமப்புற மகளிர் மேம்பாட்டு மையம் (வோர்ட்) மூலம் கிராமப்புற பெண்களுக்கு இன்டர்நெட் கற்றுத்தரும் இன்டர்நெட் சாதி (நண்பர்கள்) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும்  செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 85 பெண்கள் இன்டர்நெட் சாதி(நண்பர்கள்) ஆக கண்டறியப்பட்டு அவர்களுக்கான பயிற்சி இன்று நாமக்கல் பொரசபாளையம் வோர்ட் நிறுவன அலுவலகத்தில் இன்று தொடங்கியது.  மூன்று கட்டங்களாக நடைபெரும் இப்பயிற்சியில் மொபைல் போன்கள் மூலம் இணைய பயன்பாடு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. 







பயிற்சி பெற்ற 85 இன்டர்நெட் நண்பர்களுக்கும் 2 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் வழங்கப்படும். அவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் மொபைல் போன்களை கிராமங்களுக்கு எடுத்து சென்று கிராமப்புற மகளிருக்கு இணைய பயன்பாடு குறித்த பயிற்சிகளை வழங்குவார்கள். மேலும் இணையதள தொழில்நுட்ப பயன்பாடு குறித்து  கற்பித்து அனைத்து வகையிலும் கிராமப்புற பெண்களின் தனித்திறன்களை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதே இத்திட்டதின் முக்கிய நோக்கமாகும். 

கூகிள் இந்தியா நிறுவனத்தின் இன்டர்நெட் சாதி திட்ட பயிற்சியாளர் ஹேமந்த் மொபைல் போன்கள் மூலம் இணைய பயன்பாடு குறித்து பயிற்சியளித்தார். 

அடுத்த ஆறு மாத காலம் நடைபெறும் இத்திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 51000 கிராப்புற பெண்களுக்கு  இணையதள தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பயிற்சியை பயிற்சி பெற்ற 85 இன்டர்நெட் நண்பர்கள் வழங்குவார்கள்.  

இத்திட்டத்தின் துவக்க விழாவில் நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலர் முனைவர் அன்பு பங்கேற்று இன்டர்நெட் சாதி (நண்பர்களுக்கு) மொபைல் போன்களை வழங்கி இத்திட்டை துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் இத்திட்டத்தினை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி கிராமப்புற மகளிரின் திறனை மேம்படுத்தி சமூக பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த பயிற்சியாளர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இப்பயிற்சியில் துவக்க விழாவில் வோர்ட் நிறுவன இயக்குனர் திருமதி ரெனிடா சரளா, திட்ட மேலாளர் திரு ராஜ்மோகன், ஒருங்கிணைப்பாளர்கள் திரு ராபின் ராஜா, திருமதி ரமா, திருமதி தமிழ்வாணி, கூகிள் இந்தியா நிறுவனத்தின் இன்டர்நெட் சாதி திட்ட பயிற்சியாளர் ஹேமந்த், வாய்ஸ் பவுண்டேஷன் நிறுவன மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.